பல்லுக்கு வந்த சோதனை - சிரிப்பு கதைகள் (comedy Stories for children)
சர்வாதிகார நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த பணக்காரன் அந்த நாட்டில் இருந்து முற்றிலும் சுதந்திரமாக செயல்படக்கூடிய பக்கத்து நாட்டிற்கு வந்தான். அந்த நாட்டின் தலைநகரில் இறங்கியவுடன் அங்கு இருந்த சில நபர்களிடம் அவன் விசாரித்தான்.
இங்கே நல்ல பல் மருத்துவர் இருக்கிறாரா? அவர் எங்கே இருக்கிறார் என்று அங்கிருந்த நபர்களிடம் விசாரித்தார்.
அங்கு இருந்தவர்களோ உண்மையிலேயே ஒரு சிறந்த பல் மருத்துவரின் விலாசத்தை அவருக்கு எழுதிக் கொடுத்து அனுப்பி வைத்தனர். கூடுதலாக இவர் மிகவும் கைராசிக்காரர், திறமைசாலி இவரிடம் சென்றால் எப்படிப்பட்ட பல் நோயும் குணமாகிவிடும் என்று சிபாரிசும் செய்து அனுப்பி வைத்தனர்.
ஒரு வழியாக அந்த விலாசத்தை கண்டுபிடித்து அந்த மருத்துவரிடம் இந்த பணக்காரன் சென்று சேர்ந்தான்.
மருத்துவர் ஐயா நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று அந்த பணக்காரனிடம் கேட்டார். அந்த பணக்காரனும் வெகு யதார்த்தமாக நான் பக்கத்து நாட்டில் இருந்து தான் வருகிறேன் என்று கூறினான்.
இதைக் கேட்டு அந்தப் பல் மருத்துவர் வியந்து போனார். சரி இவ்வளவு தூரம் தாண்டி இங்கு என்னை பார்க்க வந்திருக்கிறீர்களே! உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்?
அதற்கு அந்த பணக்காரனும் எனக்கு நீண்ட நாட்களாக ஒரு பல் வலித்துக் கொண்டே இருக்கிறது அந்த பல்லை பிடுங்க வேண்டும் என்று கூறினான்.
ஏன் ஐயா? ஒரு பல்லை பிடுங்குவதற்காகவா இவ்வளவு தூரம் நாடு விட்டு நாடு கடந்து வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்.
உங்கள் ஊரில் பல் மருத்துவர்கள் இல்லையா? என்றும் கேட்டார்.
அந்தப் பணக்காரனும் அமைதியாக சொன்னான், எங்கள் நாட்டில் பல் மருத்துவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் எங்கள் நாடு ஒரு சர்வாதிகாரியின் கீழ் இருக்கிறது. எங்கள் சர்வாதிகாரியின் உத்தரவு என்ன தெரியுமா? எதற்காகவும் யாரும் வாயை திறக்க கூடாது என்பதுதான் வாயைத் திறந்தால், தலையல்லவா காணாமல் போய்விடும்!
இந்த நிலையில் நான் எந்த பல் டாக்டர் இடம் போய் என் வாயை திறந்து ஒரு பல்லை பிடுங்கி வருவது அதற்காகத்தான் நாடு விட்டு நாடு தாண்டி உங்களிடம் வந்திருக்கிறேன் என்றான்
பல் டாக்டர் பேச்சிழந்து போனார்.